ரஜினி மீது போலீசில் புகார்.. தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக குற்றச்சாட்டு..!

தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒசூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் சென்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களையும் அங்கு சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் யாவும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி இருந்தது.

இந்நிலையில், ரஜினி பேசிய பேச்சினை கொலை மிரட்டலாக கருதி, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஒசூர் சென்னத்தூர் விஓசி நகரை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.

ஓசூர் டவுன் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதியிடம் அளித்துள்ள அந்த மனுவில், “நடிகர் ரஜினி, பொய்யான கருத்தை பரப்பி போராடினால் உயிர்பலி ஆகிவிடும் என எதிர்மறையாக தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்து எச்சரிக்கை செய்துள்ளார்.

மேலும் போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டு உள்ளார். அத்துடன், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார்.

போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் எனக் கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்” எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி கலவரம் தொடர்பாக எதிர்மறையான கருத்தை தெரிவித்த நடிகர் ரஜினி மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response