எஸ்.வி.சேகரை பாஜகவிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளோம் – தமிழிசை..!

எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் இன்று வரை கைது செய்யாமல் உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. பின்னர் முன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.

ஆனால் தற்பொழுது வரை எஸ்.வி.சேகரை காவல்துறையினர் கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அவர், தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதைக் கண்டு பலர் கொந்தளித்து போயுள்ளனர்.

இந்நிலையில் கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ஏன் இன்னும் எஸ்.வி.சேகரை காவல்துறையினர் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பெண்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்.வி.சேகரை கட்சி பணியில் இருந்து ஒதுக்கிவைத்துள்ளதாகவும், சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் தெரிவித்தார்.

Leave a Response