மாணவர்களின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் : திருமாவளவன்..!

மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த திருமாவளவன், நீட் தேர்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணத்தினாலே தமிழகத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா மற்றும் டெல்லி மாணவர் ஒருவர் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மொத்தம் உள்ள 61 ஆயிரத்து 350 மருத்துவ இடங்களுக்காக, 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். அதன்படி, ஒரு இடத்திற்கு 12 மாணவர்கள் போடியிடும் சூழல் உருவாகியுள்ளது.

நீட் தேர்வை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து நீக்கி, அந்தந்த மாநில கல்விப் பட்டியலில் சேர்க்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசர அவசரமாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இந்த மரணங்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

தூத்துகுடியில் நடைபெற்ற வன்முறை, திட்டமிட்ட சதி. தீவைத்தது, பொதுமக்களைத் தாக்கியது என அனைத்திற்கும் காவல்துறை பொறுப்பேற்க வேண்டும். சுப்பிரமணிய சுவாமி என்றைக்குமே தமிழர்களுக்கு ஆதரவாக பேசியது கிடையாது. அதனால் அவர் பேசுவதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response