நீட் தேர்வு:மாணவர்களை ஒவ்வொருவராக இழந்துவருகிறோம் – விஷால் உருக்கம்..!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நடிகர் விஷால் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்துவருகிறோம். போராடி உயிரை மாய்த்துக்கொண்டாள் அனிதா. தேர்வு எழுதியும் தோற்றதால் உயிரை தந்து இருக்கிறாள் பிரதீபா. இந்த செய்தி கேள்விப்பட்டதில் இருந்தே வேதனையாக இருக்கிறது. நீட் எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் கைக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், நீட் நிரந்தரம் என்றால் நீட் எழுத மாணவர்களுக்கு போதுமான வசதிகளையும், சிறப்பு வகுப்புகளையும், மன தைரியத்தையும் கல்வி துறை வழங்கிட வேண்டும். இது அரசின் கடமை. இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது என்ற நிலை உருவாகி விடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response