வேல்முருகன் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவுகள்..!

சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வேல்முருகனை தேசத்துரோக வழக்கில் நெய்வேலி தெர்மல் போலீஸார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற தமிழக வாழ்விரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை காவிரி போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் உளுந்தூர்பேட்டை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் தூத்துக்குடியில் மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் வேல்முருகன். சிறையில் அவரை சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்த வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரத்தை கைவிட்டார் வேல்முருகன்.

பின் வேல்முருகனுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேல்முருகனை நேரில் சென்று ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நெய்வேலியில் என்எல்சி முற்றுகைப் போராட்டத்தில், வேல்முருகன் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி நெய்வேலி தெர்மல் போலீஸார் வேல்முருகனை நேற்று கைது செய்தனர். வேல்முருகனை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்ததற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response