மே 25 வரை 144 தடை உத்தரவு -தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவு..!

நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த தாக்குதலால், தற்போது அங்கு கடும் பரபரப்பு நிலவி வருகிறது . இந்த சம்பவத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து அங்கு ஏற்கனவே பிறப்பித்த 144 தடை சட்டத்தை வரும் மே 25ம் தேதிவரை நீட்டித்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நேற்று நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் காரணமாக, சட்டம் ஒழுங்கை பராமரித்திட இன்று மதியம் 1 மணி முதல், 25-ந்தேதி காலை 8 மணி வரை, தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தெரிவித்திருக்கிறார்.

இந்த தடை உத்தரவு தூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய பகுதிகள் முழுவதிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

இதனால் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், பேரணியாக செல்வதற்கும், அரிவாள், கம்பு உள்பட அபாயகரமான பொருட்களை கொண்டு செல்வதற்கும், 144 பிரிவின் கீழ் தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி-கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

Leave a Response