தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: போர்க்களமானது..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால், போலீஸார் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போரட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. மக்கள் அறிவித்துள்ள போராட்டங்களின் காரணமாக, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையப் பகுதிகளில் நேற்று (21-ம் தேதி) இரவு பத்து மணி முதல் நாளை (23-ம் தேதி) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், மேலும் இந்த கழிவுகளால் புற்றுநோய் வரக்கூடும் கூறி அ.குமரெட்டியபுரம் கிராம மக்களுக்கு கடந்த 99 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அ.குமரெட்டியபுரம் கிராம மக்களுக்கு அருகில் உள்ள 10-ம் மேற்பட்ட கிராம மக்கள் ஆதரவளித்துள்ள நிலையில், அனைவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர்.

இந்த போராட்டத்துக்கு வியாபாரிகளும், பல்வேறு அமைப்புகளை ஆதரவளித்துள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

”ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 21.05.2018 இரவு 10.00 மணி முதல் 23.05.2018 காலை 08.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.” என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Response