காமராஜருக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்படுத்துவார் ரஜினிகாந்த்! – நடிகர் ஜீவா

காமராஜருக்குப் பிறகு தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் புதிய புரட்சியை ரஜினிகாந்த் ஆட்சியில் காண முடியும் என்று நடிகர் ஜீவா பேசினார்.
திருவள்ளூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் அல்லுவலக திறப்புவிழா, மக்களுக்காக குடிநீர் பந்தல் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், நகரச் செயலாளர் மார்தாண்டன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நடிகர் ஜீவா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அலுவலகம் மற்றும் குடிநீர்ப் பந்தலையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளியில பளஸ் டூ் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும் மேல்படிப்பு படிக்க முடியாத ஏழை மாணவிக்கு சிபி ரமேஷ்குமார் நிதி உதவி வழங்கினார்.
இதைப் பார்த்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த செல்வராஜ் என்ற நிர்வாகி, தானும் நிதி உதவி வழங்குவதாக ஒரு தொகையை வழங்கி அந்த மாணவியை நெகிழ வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, இணைச் செயலாளர் ஆர்சி சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசியதாவது:
ரஜினி மக்கள் மன்றத்தில் பதவிகள், பொறுப்புகள் தங்களுக்கு இல்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். ரஜினி மக்கள் மன்றத்தில் மட்டும் 20 லட்சம் பதவிகள் உள்ளன. பூத் கமிட்டி உறுப்பினர் வரை பதவிகள்தான். தலைவர் கட்சியில் கடைகோடி தொண்டனும் தலைவராகலாம். தலைவர் தன்னை தொண்டர்களில் ஒருவராகப் பார்ப்பவர். யாரையும் பெரிய பொறுப்பில் அமர வைத்துப் பார்ப்பவர் அவர். எனவே பதவி குறித்து கவலைப்படாமல் கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
நமது இலக்கு 2 கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பது அல்ல. ஐந்தரை கோடி வாக்காளர்களையும் நமது கட்சியின் ஆதரவாளர்களாக்குவது. இப்போதே 150 தொகுதிகளில் தலைவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது, அவர்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு பிரபல நாளிதழே செய்தி வெளியிட்டுள்ளது. நமது இலக்கு 234 தொகுதிகளும்தான்.
ரஜினிகாந்த் ஆட்சிக்கு வந்தால் இந்த சிஸ்டம் மாறிவிடுமா? என்று கேட்கிறார்கள். நிச்சயம் மாறும். நூறு சதவீதம் அந்த ஆற்றல் தலைவருக்கு உள்ளது. அதற்கான திட்டங்களும் தயார்.
இன்று ரஜினி மக்கள் மன்றத்தினர் மாநிலம் முழுக்க, அறிவும் ஆற்றலும் இருந்தும் மேலே கல்வி பயில வாய்ப்பு இல்லாதவர்களைத் தேடித் தேடி உதவி வருகிறார்கள். தங்கள் சுய சம்பாத்தியப் பணத்தைக் கொடுத்து உதவுகிறார்கள். இதுதான் ரஜினியின் தொண்டர்கள். அவரது தொண்டர்களே களத்தில் இவ்வளவு செய்யும்போது, ரஜினி ஆட்சியில் கல்வி, மாணவர்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு கல்வி, வேலைவாய்ப்பில் மிகப் பெரிய புரட்சியை மக்கள் தலைவர் ரஜினிகாந்த் ஏற்படுத்துவார். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
அதே போல, நம் தலைவர் இந்தத் தமிழ்நாட்டுக்கு 5 ஆண்டுகள்தான் முதல்வர். அதன் பிறகு அவர் இந்த நாட்டின் பிரதமராகப் போகிறவர். காரணம், சரி செய்ய வேண்டியது தமிழகத்தின் சிஸ்டத்தை மட்டுமல்ல, இந்த நாட்டின் சிஸ்டத்தையும்தான்,” என்றார்.

Leave a Response