கோயில்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் ! கொடியசைத்து துவங்கி வைத்த அமைச்சர் !

தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டிஅருகே துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடந்தது.

இதற்கு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இவர்கள், கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தனர்.

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் ஆறு வண்டிகள் பங்கேற்றன. துறையூர் – பாண்டவர்மங்கலம் சாலையில் 10 கிலோ மீட்டர் பந்தய தூரம் அமைக்கப்பட்டிருந்தது.

இதில் சங்கரப்பேரி கருத்தப்பாண்டி மாட்டு வண்டி முதல் இடமும், ஈராச்சி சிவகிரி மாட்டு வண்டி இரண்டாவது இடமும், தெற்கு வண்டானம் மகேந்திரன் மாட்டு வண்டி மூன்றாவது இடமும் பிடித்தது.

13 வண்டிகள் பங்கேற்ற சிறிய மாட்டு வண்டி பந்தயத்துக்காக துறையூர் – கிழவிபட்டி சாலையில் 6 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டு இருந்தது.

இதில் சித்தவநாயக்கன்பட்டி பரமசிவன் மாட்டு வண்டி முதல் இடமும், மறுகால்குறிச்சி பொன்னையன் மாட்டு வண்டி இரண்டாவது இடமும், இடைச்சியூரணி மகிமா மாட்டு வண்டி மூன்றாவது இடமும் பிடித்தது.

போட்டிகள் நிறைவடைந்த பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.21 ஆயிரத்து ஒன்று, 2-வது பரிசாக ரூ.18 ஆயிரத்து ஒன்று, 3-வது பரிசாக ரூ.15 ஆயிரத்து ஒன்று வழங்கப்பட்டது.

அதேபோன்று, சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்து ஒன்று, 2-வது பரிசாக ரூ.13 ஆயிரத்து ஒன்று, 3-வது பரிசாக ரூ.11 ஆயிரத்து ஒன்று வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த ஏற்பாடுகளை அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ் பாண்டியன் தலைமையில், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Response