“யார் தலைவர் என தெரியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்”நடிகர் அபிசரவணன் ஆதங்கம்..!

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து ‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ பாடல் ஒன்றை. உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பமாக. இந்திராஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன் ஆதரவுடன் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப்பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட இயக்குனர்கள் வ.கௌதமன், மீரா கதிரவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன், நடிகர்கள் அரீஷ்குமார், அபிசரவணன், மைம் கோபி, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் சமூக ஆர்வலர்களான சபரிமாலா, கம்பம் குணாஜி, விவசாயிகள் தரப்பிலிருந்து ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை விவசாயி செல்வமணி உள்ளிட்ட சில விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
நடிகர் அபிசரவணன் பேசும்போது:

“நீட் தேர்வை எதிர்த்தோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியோ நம்மை பாதிக்கும் எந்த ஒரு விஷயம் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையே சிலர் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். அவர்களும் நம்முடனேயே இருப்பவர்கள் தான். அப்படியானால் இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்த நம்மை எது பிரிக்கிறது..? இதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுதவரும் நம் பிள்ளைகள் சிரமப்பட்டுவிட கூடாது என்பதற்காக அங்குள்ள தமிழ் உணர்வாளர்களுடன் சேர்ந்து உதவி செய்ய காத்திருந்தோம்.. ஆனால் ஒருவர் கூட வரவில்லை.. வந்தவர்கள் எல்லாம் வசதியானவர்கள்.. விமானத்தில் தேர்வெழுத வந்தவர்கள்.. அப்படியானால் ராஜஸ்தானில் தேர்வெழுத சென்ற தமிழர்கள் சிரமப்படுகிறார்கள் என தவறான தகவல்களை யார் எதற்காக பரப்புகிறார்கள்..? எங்களை திடீர் போராளிகள் போல சித்தரிக்கிறார்கள், போராடவில்லை என்றாலும் தயவுசெய்து எங்களை காயப்படுத்தாதீர்கள் இன்றுவரை யார் தலைவர் என்றே தெரியாமல் தானே போராடிக்கொண்டு இருக்கிறோம், அழைப்பவர்கள் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறோம்” என்றார்.

Leave a Response