திரையுலகில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டும்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்

திரையுலகில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “திரையுலகில் 48 நாட்களாக நீண்டிருந்த பிரச்சனை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு, சுமுக தீர்வு எட்டப்பட்டது என்பதை தமிழக அமைச்சர் தொலைக்காட்சியில் அறிவித்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.

க்யூப் சினிமா, ஃபைனான்ஸ் பிரச்சனைகள், தயாரிப்பாளர்கள், படங்கள் வெளியிடுவதில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்வதோடு, அறிவிப்பு என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல் உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்.

இனிவரும் காலங்களில் இப்பிரச்சனைகள் தொடராத வண்ணம் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், துணை நடிகர்கள் மற்றும் பெப்ஸியில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் நல்லதொரு முடிவைவும், தீர்வைவும் செயல்படுத்தவேண்டும்.

எனது 40 ஆண்டு கலையுலக பாராட்டு விழாவில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் திரையுலகில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசியபோது, கலையுலகிற்கு பிரச்சனைகள் என்றால் எப்பொழுதும் நான் முன்வந்து உதவிசெய்ய தாயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தேன்.

கலையுலகில் இருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைவரும் ஒரே குடும்பமாக இருந்து, கலையுலக அனைத்து பிரச்சனைகளையும் நமது பிரச்சனையாக எடுத்துக்கொண்டு ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Response