மூன்று நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கும்: விஷால்

சினிமா பிரச்சனைகளுக்கு தீர்வு காண 3 நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும்என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

புதிய படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்பினர் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இதைக் குறைக்கக் கோரியும், தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வலியுறுத்தியும் தயாரிப்பாளர்கள் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

படத் தயாரிப்பாளர்களுக்கும்தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன. இந்தப் பிரச்சனையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜுவை நேரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பிற்கு பின்அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறுகையில், ”திரையுலகினரின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு சார்பில் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

இதனைத்தொடர்ந்துசெய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறுகையில், ”தியேட்டர்களில் டிக்கெட்டுகளை கம்ப்யூட்டர் மயமாக்கவும், டிஜிட்டல் சேவை கட்டணங்களை குறைக்கவும் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம். சினிமா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண இன்னும் இரண்டு அல்லது மூன்றுநாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளோம்.” என்றார்.

Leave a Response