மாசாணி – விமர்சனம்!!

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இரட்டை இயக்குனர்களின் ஒரு படைப்பு. ஒருவர் கதை எழுத, மற்றொருவர் வசனம் எழுத இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அவ்வப்போது திகில் படங்கள் வந்து பயமுறுத்திவிட்டு போகும். தற்போது இந்த கோடைகாலத்தில் ஒரு கிராமத்து  கதையை திகிலுடன் சொல்லியிருக்கிறார்கள் இயக்குனர்கள். இன்னொரு முக்கியமான விஷயம், ராம்கியின் ரீ-என்ட்ரி!!

கதை ஒரு மழைநேரத்தில் தொடங்குகிறது. பின்னர் நாயகன் அகில், நாயகி சிஜா ரோஸ் சம்பந்தப்பட்ட கலகல காட்சிகள் ஒருபுறம் செல்ல, மறுபுறம் திகிலான சில சம்பவங்கள் கல்வடாகம் கிராமத்தில் நடக்கிறது. அதற்கான பின்னணி என்ன? ஏன் அந்த கிராமத்தில் அப்படி நடக்கிறது என்பதை இரண்டாவது பாதியில் விரிவாக விளக்கியிருக்கிறார்கள். இரண்டாவது பாதியில் தான் ராம்கி – இனியா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும், அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதையும், கிராமத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதையும் கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் விளக்கமாக சொல்லி சுபமாக முடிக்கிறார்.

படத்தில் முக்கியமான ஹைலைட், ராம்கியின் ரீ-என்ட்ரி! ரொம்ப நாளைக்கு பின் அவரை திரையில் பார்க்கும்போது கூட அதே உற்சாகம். அதே எனெர்ஜி. மீசையை முறுக்கி கொண்டு நடக்கும் போதும்,காமெடியாக பேசும் போதும் ரசிக்க வைக்கிறார். மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கான அனைத்து தகுதிகளும், அறிகுறிகளும் அவரிடம் உள்ளது.

வித்தியாசமான, ஒரு பரிதாபமான கேரக்டரில் இனியா, ராம்கியுடனான காட்சிகள் கலகலக்க வைத்தாலும், ராம்கி இறந்தபின் வரும் காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார். இன்னொரு நாயகனாக வரும் அகில் பரவாயில்லை. சிஜா ரோஸ் கிராமத்துக்கு ஏற்ற அழகு தேவதை. இவர்களின் காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை.

படத்தில் முக்கிய வில்லன்,, சாரி வில்லி ரோஜா. ராம்கிக்கு மனைவியாக நடித்த அவர், அவருக்கே அண்ணி கதாபத்திரத்தில் நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், ப்ளாக் பாண்டி, ஒய்.ஜி.மகேந்திரா, சரத்பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் வருகிறார்கள். ப்ளாக் பாண்டி காமெடி இடைச்செருகலாக இருப்பது கொஞ்சம் போர்.

படத்தின் ஒளிப்பதிவு பரவாயில்லை. இரவு நேர காட்சிகளை பகலில் எடுத்து, ப்ளாக் டோனில் காட்டி இருப்பது கொஞ்சம் நெருடல்.

படத்தில் பாடல்களை விட பின்னணி இசை ஒரு படி மேல். இனியா சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் பின்னணி இசை நன்று.

படத்தில் நிறைய பாடல்கள் தேவையே இல்லை. அவற்றை குறைத்து படத்தை இன்னும் ட்ரிம் பண்ணியிருந்தால் இன்னும் திகிலாக இருந்திருக்கும். அதனை தவற விட்டுள்ளனர் இயக்குனர்கள் பத்மராஜா – எல்.ஜி.ஆர்.