ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்ததாகவும், தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் தரப்படும் என அறிவித்து ஓட்டு வேட்டையாடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தினகரன் தரப்பு திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் வாக்குகளை குக்கர் சின்னம் தேயத் தேய குத்தி தள்ளியதால் அவர் 50 சதவீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார் என பிற கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இப்போது டோக்கனுக்கு பதிலாக பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நன்றி தெரிவிக்க கூட ஆர்.கே.நகர் போகாமல் தினகரன் இழுத்தடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 20 ரூபாய் டோக்கன் தொடர்பாக ஆர்.கே.நகர் மக்கள் பொறுமை இழக்க தொடங்கிவிட்டனர். புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் வசிக்கும் தினகரன் ஆதரவாளரான ஜான்பீட்டரிடம் (35) இதே விவகாரத்திற்காக தகராறு செய்துள்ளார்.
ஜான் பீட்டரிடம், சென்ற கார்த்திகேயன் தங்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து, ஜான் பீட்டர் மற்றும் சரண்ராஜ் (20), செல்வம் (39), ரவி (40) ஆகியோர் சேர்ந்து கார்த்திகேயனை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த கார்த்திகேயன்ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ரூ.10,000 தருவதாக கூறி இவர்கள் டோக்கன் சப்ளை செய்து வந்தது, போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளதால்,தினகரனுக்கு சிக்கல் எழுந்துள்ளது. தினகரன் தேர்தல் செலவு கணக்கில் இந்த பணத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் செலவீனங்களை தினகரன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது வாக்காளர்களுக்கு கொடுத்த பண மதிப்பையும் தினகரன் தேர்தல் செலவு கணக்கில் சேர்த்தால், தினகரன் எம்எல்ஏ பதவி பறிபோகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.