நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார்.
கோவில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாருமே தேர்வு எழுத போகத் தேவையில்லை என்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூறி இருந்தார்.
இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நவம்பர் 25 ம் தேதி புகார் அளித்தார்.
தொடர்ந்து, தனது புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.