சென்னையைச் சேர்ந்த வி. நெடுமாறன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை செய்திருந்தார். அதில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம். ஜோதிமணி ஆகியோர் சென்னை அருகேயுள்ள தாழம்பூர் கிராமத்தில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் மிதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ரூ. 3.5 கோடியை முன்பணமாகப் பெற்றுவிட்டு நிலத்தை விற்கவில்லை என்றும், முன்பணத்தை திருப்பித் தரவும் இல்லை என்றும் தெரிவித்துள்ள நெடுமாறன் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு. மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி முதலாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ எனவும் நெடுமாறன் அநத மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை 2015-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதங்களுக்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட்டது.
அதே நேரத்தில் தன் மீது தவறாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் வேண்டும் என்று கருணாநிதியின் மகள் செல்வி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், வழக்கில் இருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான மனு மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர்.