திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், கவுசல்யா தந்தை சின்னசாமி, இவர்கள் இருவரையும் கொலை செய்ய கூலிப்படையை ஏவினார்.
கடந்த ஆண்டு கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது.
இதில் கவுசல்யா தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். சங்கர் மரணமடைந்தார்.
இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தின் வெளியே, 2 இளைஞர்கள் தீர்ப்பை விமர்சனம் செய்து சங்கர் கொலையை ஆதரித்து பேசியதாக கூறப்படுகிறது. அவர்களை பொதுமக்கள் சேர்ந்து அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, காவல்துறையினர் குறுக்கிட்டு விலக்கி விட்டனர். இதனிடையே காவல்துறை பாதுகாப்பில் இருந்த அந்த இருவரையும் மீண்டும் பொதுமக்கள் இழுத்து போட்டு அடித்தனர். இதனால் கோர்ட்டை சுற்றிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.