ஓகி புயலில் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வலியுறுத்தி குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மீனவர்களை மீட்கும் பணியில் அரசு அலட்சியம் காட்டி வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சின்னத்துறை, மார்த்தாண்டம் துறை மீனவர்கள் அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராஜாக்கமங்கலம் துறை முதல் மணக்குடி வரையிலான மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் மீன்களின் விலை உயர்ந்து வருகிறது.
மீனவர்களுக்காக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குமரி, நாகை, ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் மீன்களின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக 25 டன் மீன்கள் சந்தைக்கு வரும் என தெரிவித்த விற்பனையாளர்கள், தற்போது 10 டன் அளவு மீன் மட்டுமே வருவதாக கூறியுள்ளனர். மீன்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் கிராக்கியால் உயர்ரக மீன்களின் விலை சுமார் ரூ.150 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது.