தமிழக முதல்வராக 6வது முறையாக கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார் ஜெயலலிதா. எம்ஜிஆருக்குப் பிறகு 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு என தொடர்ந்து இருமுறை பதவியேற்றவர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் இரவு 10.30 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுவரை அதிமுக தொண்டர்கள் அதிகம் கேள்விப் படாத சம்பவம் அது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றதுமே ஆடிதான் போயினர் அதிமுக தொண்டர்கள். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.
ஜெயலலிதா குணமடைந்துவிட்டார் விரைவில் வீடு திரும்புவார் என அதிமுக நிர்வாகிகளும் அப்பல்லோ மருத்துவர்களும் தெரிவித்தனர். இதனால் ஜெயலலிதா நிச்சயம் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடனே இருந்தனர் அதிமுக தொண்டர்கள்.
ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது மருத்துவமனை நிர்வாகம்.
இதனால் அப்பல்லோ மருத்துவமனை வளாகம் உட்பட தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது. தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக ஜெயா டிவி உட்பட பெரும்பாலான தொலைக்காட்சிகளில் ஃபிளாஷ் நியூஸ்கள் வெளியானது. இதனால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு கூடியிருந்த மக்கள் அடித்துக்கொண்டு அழுது புலம்பினர்.
இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை. ஜெயலலிதா மரணம் என பரவும் செய்தி வதந்தி என்றும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.
அதிமுக தலைமையகத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து சுமார் 20 நிமிடங்களிலேயே இணையத்தளங்கள் மற்றும் செய்திப் பத்திரிகைகளில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதுடன் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கட்சிக் கொடி முழுக் கம்பத்திற்கு உயர்த்தப்பட்டது.
பின்னர் சிகிச்சைபலன்றி ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நள்ளிரவில் அறிவித்தது. இந்த தகவல் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.