அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், உலகத் தமிழர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்கா வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சியில் இறங்கி, நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர்.
அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், நிதிப் பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில் தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாகத் தர ஒப்புக்கொண்டது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் நிதிப் பற்றாகுறை நிலவுவதாகக் கூறப்பட்டதால், பல சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக ஆசிரியர் சங்கம் எனப் பல அமைப்புகள் தொடர்ந்து நிதி உதவி வழங்கியும், சேகரித்தும் வருகின்றனர்.
இந்த வகையில்,
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக முதன்முறையாக தனி ஒரு மனிதனாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். மேற்குவங்க அரசாங்கத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் பாலச்சந்திரன். இந்தியாவின் தகவல் தொடர்புத்துறையை அதிரவைத்த இஸ்ரோ ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்த ஊழலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய முக்கிய அதிகாரிகளுள் ஒருவர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.