மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலராக இருந்த மணீஷ்வரராஜா, பதவி உயர்வில் குஜராத்தில் மத்திய அரசு இயக்குனரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அருண்பிரசாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
இருவரும் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது:
இந்தியாவிலேயே முதல்முறையாக வாட்ஸ் அப் மூலமாக பொதுமக்கள் பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை தெரிந்து கொள்ளும் வசதி, மதுரை மண்டலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதுபோல நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்போர்ட் சார்ந்த சந்தேகங்கள், குறைகள் மற்றும் விண்ணப்பத்தின் நிலையை மிக சுலபமாக அறிய புதிய தொழில்நுட்பங்கள், ட்விட்டர், முகநூல், ஸ்கைப் ஆகிய சேவை கொண்டும் அறிந்து கொள்ள வசதி உள்ளது. மண்டல அலுவலகத்தின் கீழ் வரும் அனைத்து மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. வேலை நாட்கள், மேளா நாட்களில் மாணவ, மாணவிகளுக்கான பாஸ்போர்ட் சேவை மையத்தில், முன் தேதி பெறாமல் ‘வாக்இன்’ முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தபால்நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மண்டலத்தில் உள்ள நாகர்கோவில், திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய ஊர்களில் இருக்கும் தலைமை தபால்நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்படும். வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் இசிஆர் வகை பாஸ்போர்ட் பெற்று செல்லுதல் மிகவும் நல்லது. பாதுகாப்பானதும் கூட. இந்த வழியில் பாஸ்போர்ட் எடுத்து செல்பவர்களுக்கு வெளிநாட்டில் பிரச்னை வந்தால் இந்திய அரசு உதவிட முன் வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.