சென்னை செம்மஞ்சேரியில் உள்ளது சத்தியபாமா பல்கலைக்கழகம். இங்கு கணினி அறிவியல் படித்து வந்தார் ஆந்திராவை சேர்ந்த மாணவி ராகமோனிகா. இவர் நேற்று காலை நடந்த செமஸ்டர் தேர்வில் சக மாணவியின் விடைத்தாளைப் பார்த்து எழுதியதாகவும், இதனைக் கவனித்த பேராசிரியர் ஒருவர் ராகமோனிகாவை தேர்வறையை விட்டு வெளியேற்றியதாகவும், ஆடைகளைக் களையச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த மாணவி ராகமோனிகா பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியது. நேற்று இரவு, பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்கு வெளியே தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.