முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி,
“மாநில அரசுகளுக்கு உண்டான உரிமைகளை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக அ.தி.மு.க அரசு மத்திய அரசிடம் விலைபோகிவிட்டது. விளம்பர ஆட்சியான மோடி ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தவில்லை. பண மதிப்பிழப்பால் பொருளாதார வீழ்ச்சியும் வேலைவாய்ப்பு இழப்பும் ஏற்பட்டுள்ளது.
500 நிலக்கரி சுரங்கங்களை மத்திய அரசு தனியார்மயமாக்கி பா.ஜ.கவினரை ஊழலில் ஈடுபடுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க வருமானவரித் துறையை பயன்படுத்தும் மத்திய அரசு அவர்கள்மீது சோதனையை ஏனோ மேற்கொள்ளவில்லை. பிரதமர் மோடியிடம் விலைபோயிருக்கும் தமிழக அ.தி.மு.க அரசால் தமிழ்நாடு சீரழிந்துவருகிறது.
தமிழகத்தை ஆளுபவர்கள் ஏமாந்துபோய் மாநில உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு மத்திய அரசுக்கு அடிமைப்போல் செயல்படுகிறார்கள். ஆகமொத்தம் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் முதுகெலும்பு இல்லாதவர்களைப்போல் செயல்படுகின்றனர்” என்று கடுமையாக விமர்சித்தார்.