சசிகலாவின் அக்காள் மகள் ஸ்ரீலதா இவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
பாஸ்கரனும், மனைவி ஸ்ரீலதாவும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிபிஐ, 1997ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் 1999ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2000ம் ஆண்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 2001ம் ஆண்டில் சிபிஐ சாட்சிகள் விசாரணையை தொடங்கியது.
சிபிஐ சார்பில் 56 சாட்சிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 130 ஆவணங்களும், 3 சான்று பொருட்களும் தாக்கல் செய்யப்பட்டன. பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில் கடந்த 2008ம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாகநாதன் தீர்ப்பு வழங்கினார்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகை ரூ.20 லட்சத்தை கட்டத் தவறினால் மேலும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் உறவினர் எஸ்.ஆர்.பாஸ்கரன், அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.