தமிழ்ப் பேராசிரியர் மா. நன்னன் காலமானார்!

nannan

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடலில் பிறந்தவர் நன்னன். தமிழ்க் கட்டுரைகள், பாட நூல்கள் என 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பொதிகை டிவி உள்ளிட்ட தமிழ்த் தொலைக்காட்சிகளில் தமிழ் தொடர்பான விளக்க நிகழ்ச்சிகள், பேச்சு, உரை நிகழ்ச்சிகள் என பலவற்றை நடத்தியிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்தார்.

nannar

மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.

பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட விருதுகள் பலவற்றைப் பெற்றவர் நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், எழுத்து அறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையை உருவாக்கியவர். தனித் தமிழ் இயக்கம், பெரியார் சீர்திருத்த எழுத்து என இயங்கியவர். பகுத்தறிவு இலக்கியங்களில் உறுதியாக நின்றவர். துவக்கத்தில் பக்தி இலக்கியங்களிலும் அனுபவம் பெற்றவர் என்பதால், தமிழின் சிறப்பை தனது நிகழ்ச்சிகளின் மூலம் இளைய சமுதாயத்துக்கும் கொண்டு சென்றவர்.

nannar1

தமிழறிஞருமான மா.நன்னன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 94. இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். தனித் தமிழ் இயக்கத்தில் ஈடுபட்டவர் மா. நன்னன். அவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். இவரது பெற்றோர் பெயர் மீனாட்சி, மாணிக்கம். இவரது வாழ்க்கைத் துணைவி ந. பார்வதி. இவருக்கு வேண்மாள், அவ்வை என்ற மகள்களும் அண்ணல் என்ற மகனும் உள்ளனர்.

Leave a Response