டெல்லியில் 3ம் தேதி தொடங்கி வரும் 5ம் தேதி வரை உலக உணவு-இந்தியா 2017 என்ற கருத்தரங்கம் நடக்கிறது. மத்திய உணவுத் துறை அமைச்சகமும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்துகின்றது. மிகவும் பெரியளவில் நடக்கும் இந்த கருத்தரங்கில் பல நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்த உணவு திருவிழாவில் இன்று, ஒவ்வொரு நாட்டில் இருந்தும் பிரதிநிதியாக ஒரு உணவுப் பொருள் சமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலான உணவுகள் அந்த நாட்டின் தேசிய உணவாகும். இந்நிலையில் இந்தியாவில் இருந்து இந்த நிகழ்வில் கிச்சடி சமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த கருத்தரங்கில் இன்று நடக்கும் நிகழ்வில் கிச்சடி இந்திய தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆனது. ஆனால், இந்த தகவலுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கிச்சடி இந்திய உணவுகளின் பிரதிநிதியாக மட்டுமே சமைக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் கிச்சடியை வைத்து இன்று உலக சாதனை செய்யப்பட இருக்கிறது. அதன்படி அங்கு 800 கிலோ கிச்சடி சமைக்கப்பட இருக்கிறது. சஞ்சீவ் கப்பூர் என்ற பிரபல சமையல் நிபுணர் இந்த சாதனையை செய்ய இருக்கிறார். சமைத்த கிச்சடி பின்னர் சுமார் 60,000 அனாதை குழந்தைகளுக்கும், விருந்தினர்களுக்கும் வழங்கப்படும்.