தமிழ் சினிமாவின் முக்கிய படப்பிடிப்பு தளங்களில் ஒன்று மெரீனா பீச். காதல் காட்சிகள் இங்கு அதிகமாக படமாக்கப்படும். தற்போது படப்பிடிப்பு நடத்த அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
சென்னை நகரின் முக்கியமான பகுதிகளில் பகலில் படப்பிடிப்பு நடத்த ஏற்கெனவே தடை உள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்னை மெரீனா பீச் முதல் பெசன்ட் நகர் பீச் வரை எந்த படப்பிடிப்பும் நடத்த முடியாது என்று நிரந்தர தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
“சென்னையில் மெரீனா பீச் முதல் பெசன்ட் நகர் பீச் ரோடு வரையில் இனி படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளது. மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மெரீனா கடற்கரையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசும் காவல் துறையும் எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதிதான் இந்த அறிவிப்பும் என்று கூறப்படுகிறது.
இனி கடற்கரை காதல் காட்சி எடுக்க வேண்டும் என்றால் திரைத்துறையினர் கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் விடுதிகள், பூங்காக்களில் உள்ள கடற்கரைக்கோ அல்லது மாமல்லபுரம் கடற்கரைக்கோதான் செல்ல வேண்டும்.