தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
தென்மேற்கு பருவமழை நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்து நேற்று (அக்.24) முற்றிலுமாக விலகியது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், “ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தமிழகத்தில் வீசுகிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “தற்போது கடலோரப் பகுதிகளில் தொடங்கிய மழை மற்ற பகுதியிலும் மிதமாக பெய்யக் கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது” எனத் தெரிவித்தார்.