கர்நாடகாவின் கதக் மற்றும் பீதர் ஆகிய இரு மாவட்டங்களில் கன மழை பெய்துவருவதால், மேற்கூரை இடிந்து விழுந்தும் பாட்டி மற்றும் இரு பேரப்பிள்ளைகளும், வெள்ள நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து 3 பேர்கள் என மொத்தம் 6 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த பல நாட்களாக கன மழை பெய்துவருகிறது. பெங்களூரு நகரில் எப்போதும் இல்லாத வகையில் கன மழை கொட்டி வருகிறது. ஒரு வழியாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று மாலை வரை பெங்களூரு நகரில் மழை பெய்யவில்லை. வட கர்நாடகா மாவட்டங்களில் மட்டும் இன்னும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து கன மழை பெய்துவருவதால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.
இந்நிலையில், கதக் மாவட்டம், கஜேந்திரகடா நகரில் நேற்று காலை 5 மணி அளவில் கன மழை கொட்டித்தீர்த்தது. அப்போது கஜேந்திரகடா நகரில் உள்ள கஞ்சேபேட்டையில் வசிப்பவர் மெகபூபி(58). இவர் தனது பேரப்பிள்ளைகளான முஸ்கான்(8) மற்றும் நஜியா(10) மற்றும் மேலும் ஒருவர் என 4 பேர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பாட்டி மெகபூபி மற்றும் பேரப்பிள்ளைகளான முஸ்கான், நஜியா ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீர்கள் பொதுமக்களின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதேபோல, பீதர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய கன பெய்தது. இதனால், பீதர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அனைத்து நிரம்பின. மேலும், சில இடங்களில் ஏரிகளின் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்தன சாலைகள் வயல்வெளிகளில் எங்கு பார்த்தாலும், தண்ணீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சி அளித்தன.
இதனால், சாலை எது பள்ளம் எது, குளம் எது குட்டை எது என்று தெரியாத நிலை காணப்பட்டன. இந்நிலையில், பீதர் மாவட்டம், பசவகல்யாண் தாலுகா, லாடகந்தி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரஜித் வாடேகர்(52). இவர் கேசவபாபுராவ் பைனாகே(40) மற்றும் சத்யவதி கேசவ பைனாகே(32) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்று வீடு திரும்பினர். அப்போது, சாலை அருகே பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் கால் தவறி விழுந்த மூன்றுபேரும் தவறி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நீரில் மூழ்கியவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேற்கண்ட இரு சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் வழக்குபதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இரு மாவட்டங்களில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தும், பள்ளத்தில் விழுந்தும் 6 பேர் இறந்த சம்பவம் கதக் மற்றும் பீதர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.