நடிகர் சந்தானத்துக்கும் சண்முகசுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சந்தானம், பா.ஜ.க தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்தைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.
அதையடுத்து, நடிகர் சந்தானத்தால் தாக்கப்பட்ட பா.ஜ.க தென் சென்னை மாவட்ட துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்த், விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சந்தானம், சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சந்தானம் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, முன் ஜாமீன் கோரி சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இரண்டு வாரம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சந்தானத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்.