கீரின் வாட்ச் மற்றும் தமிழ்ச்செல்வன் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு நடைப்பயணம், நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா இன்று முகப்பேர் மேற்கு பூங்கா அருகில் நடைப்பெற்றது. இதில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் கலந்துக்கொண்டு பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் நாளுக்குநாள் அதன் பாதிப்பும் தாக்கமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று முகப்பேர் மேற்கு பூங்கா அருகில் சென்னை மாநகராட்சியின் 91-வது வார்டு முன்னாள் மாநகர உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான தமிழ்ச்செல்வன் மற்றும் கீரின் வாட்ச் என்ற அமைப்பும் இணைந்து டெங்கு விழிப்புணர்வு நடைப்பயணம் , நிலவேம்பு கசாயம் வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் கலந்துக்கொள்வாரென முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
அமிர்தா ஸ்கூல், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர், மற்றும் ஆரவ், சமூக ஆர்வலர் யஷ்வந்த் சிங் ஆகியோர் கலந்துகொண்டு நடைப்பயணம் மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து பேசிய ஆரவ் “இந்த டெங்கு காய்ச்சலால் மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாகிறார்கள். இந்த காய்ச்சலை முன்கூட்டியே தடுக்க மக்கள், குழந்தைகள் நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றை பருகுதோடு பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்” என்றார்.
பின்னர் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆரவ் நிலவேம்பு கசாயம் வழங்கிதோடு அவரும் பருகினார்.
இந்த விழாவில் கலந்துக்கொண்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்த தமிழ்செல்வன் நன்றியினைத் தெரிவித்துகொண்டார். இவர் முன்னாள் தமிழக அமைச்சர் கக்கன் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.