”சிவாஜி,கமல் திரையில் நன்றாக நடிப்பதுபோன்று, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நேரில் நன்றாக நடிக்கின்றனர்” என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித்தை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ‘டெங்கு காய்ச்சல் பிரச்னை, சட்டம்- ஒழுங்குப் பிரச்னை குறித்து ஆளுநரிடம் முறையிட்டேன். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு, ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. சிவாஜி,கமல் திரையில் நன்றாக நடிப்பது போன்று, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நேரில் நன்றாக நடிக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச்செல்வது தவறு. வாக்கி-டாக்கி ஊழல் தெரியாது. அதனால், அதுகுறித்து பேசமுடியாது. சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால், கலந்துகொள்ளவில்லை. ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது அவர்களது விருப்பம். வரும் தேர்தலை தனியாகவே சந்திக்கப்போகிறேன். ஆளுநரின் செயல்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்றார்.