கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
குளோபல் மருத்துவமனையில் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டுள்ளன!
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் , தஞ்சாவூரில் மூளைச்சாவடநித ஒருவருடைய உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பு மாற்று விதிகள் மீறப்பட்டிருக்கிறது. இது பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இந்த சந்தேகங்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும். இதனால் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய உறுப்புகள் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச் சாவு அடைகிறாரோ அந்த மருத்துவமனைக்குத்தான் அவரது உறுப்புகள் சொந்தம் என்பது விதி. ஆனால் தஞ்சாவூரில் இறந்த ஒரு ஏழை இளைஞனின் உடல் எப்படி சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது? அதற்கான செலவை யார் ஏற்றுக்கொண்டது? இதையெல்லாம் தீர விசாரிக்க வேண்டும். இப்படியான வியாபார நோக்கத்துடன் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை அவரது பெற்றோரை ஏமாற்றி எதற்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும். நடராஜன் சிகிச்சை விஷயத்தில் காட்டிய அவசரத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏன் காட்டவில்லை என தமிழிசை கேள்வி எழுப்பினார்.