ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளான பேரறிவாளன் , சாந்தன் , முருகன் உட்பட 7-பேரும் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் பல வருடங்களாக ஆயுள்தண்டனையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை காரணமாக விடுதலை செய்வது வழக்கம். பதினான்கு ஆண்டுகள் நிறைவுசெய்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை, ஆலோசனைக் குழு பரிந்துரை, முடிவின்படிதான் விடுதலைசெய்ய முடியும். விடுவிக்கும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களை சமீபத்தில் தமிழக அரசு நியமித்திருந்தது.
இக்குழுவின் பரிந்துரைப்படி, ஆயுள் தண்டனை முடித்தவர்களை விடுதலைசெய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
இந்தக்குழுவின் பரிந்திரையை ஏற்று 776-ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நன்னடத்தையின்படி படிப்படியாக விடுதலை செய்ய உள்ளதாக, சிறைத்துறை ஐ.ஜி.சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
இதன்மூலம், தமிழகம் முழுவதிலும் 22-பெண்கள் உட்பட 776-சிறைவாசிகள், நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்கள்.
இந்தப்பட்டியலில் ராஜீவ் கொலையாளிகளான பேரறிவாளன் , சாந்தன் , முருகன் உட்பட 7-பேரும் விடுவிக்கப்படலாமென்றும், இதில் அவர்கள் பெயர் இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் சிறைத்துறையின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.