சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஜெயலலிதா சேர்க்கப்பட்டார்.
ஜெயலலிதாவுக்கு, சென்னை, டெல்லி மற்றும் இங்கிலாந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்கள் உள்ளிட்டோர், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா விரைவில் திரும்புவார் என்று தொண்டர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஜெயலலிதாவின் மரண செய்திதான் வந்தது.
சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரையில் நடந்த கூட்டத்தின்போது, மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும், அவர் இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய் என்றும் தெரிவித்தார். சீனிவாசனையொட்டி பொன்னையனும் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, மருத்துவமனையில் சசிகலா கூறியதையே நாங்கள் மக்களுக்கு தெரிவித்தோம் என்றும் இன்று கூறினார். இந்த பேச்சுக்களால் டிடிவி தினகரன் தரப்பு கலக்கமடைந்துள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். பேட்டியின்போது, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட் தகவல் பொய் என்று கூறினார்.
மருத்துவமனைக்கு ஆளுநர் வித்யாசாகர் வந்தபோது, ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை என்றும் அந்த நேரத்தில் தானும் மருத்துவமனையில் இருந்ததாகவும் தீபக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய தீபக், மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு வந்த பிறகு 3 நாட்கள் மட்டுமே அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் தீபக் கூறியுள்ளார்.