விதார்த், டெல்னா டேவிஸ், இயக்குநர் பாரதிராஜா, பாலாசிங், குமரவேல், கல்கி உள்ளிட்ட பலரின் நடிப்பில் புதுமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘குரங்கு பொம்மை!’
படம் வெளியாகி ஒருவாரமானபின்னும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருப்பதையடுத்து ‘குரங்கு பொம்மை’ படக்குழுவினர் இன்று மதியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்கள்!
நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, இந்திய அளவுல பார்த்தா பெங்காளி நடிகர்கள்தான் எந்த கேரக்டருக்கு எந்தளவு நடிக்கணும்னு புரிஞ்சு அந்த அளவு மீறாம, இயல்புத் தன்மை மீறாம நடிப்பாங்க. அதானால எனக்கு அந்த நடிகர்களை ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி, விதார்த் இந்த படத்துல அளவா நடிச்சிருக்கார்.
அதே மாதிரி வில்லனா நடிச்ச குமரவேல்! முகம் முழுக்க புள்ளி புள்ளியா ஒரு நடிகர் என் முன்னே வந்து உட்கார்ந்தப்போ இந்தாள் என்ன பண்ணப் போறார்னு பார்த்தேன். கண்ணுல வில்லத்தனத்தைக் காட்டி பிரமாதப்படுத்திட்டார்’’ என்றவர்,
‘‘நான் பெரிய டைரக்டர்ங்கிற தயக்கம், பயம் எதுவும் இந்த படத்தோட டைரக்டருக்கு வந்துடக்கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருந்தேன். அதனாலேயே அவரோட வயசுக்கு இறங்கி தோள்ல கை போட்டு ஃபிரெண்ட்லியா பழகினேன். பாரதிராஜான்னாலே கோபமா இருப்பார், ஷூட்டிங் ஸ்பாட்ல நடிகர்களை அடிப்பார் அது இதுன்னு என் மேல ஒரு இமேஜ் இருக்குதுல்ல. அந்த டெரர் பாரதிராஜாவைத் தூக்கிப் போட்டுட்டு வெறும் நடிகனா மட்டுமே ஸ்பாட்ல இருந்தேன், பெஃர்பாமென்ஸ் பண்ணேன்.
எனக்கென்னவோ நான் 30 சதவிகித நடிப்பைத்தான் கொடுத்த மாதிரி தோணுது. ஆனா, படம் பார்த்தவங்க நான் 100 சதவிகித நடிப்பைக் கொட்டிருக்கேன்கிற மாதிரி சொல்றாங்க. விமர்சனங்கள்லயும் எழுதிருக்காங்க. இனி, இதே மாதிரி நல்ல படங்களா தேர்ந்தெடுத்து நடிப்பேன்!” என்றார்.
மட்டுமல்லாது படத்தில் நடித்திருந்த பி.எல். தேனப்பன், கல்கி உள்ளிட்ட இன்னபிற நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் பாராட்டிப் பேசினார்.
படத்தின் நாயகன் விதார்த், ’’எனக்கு பெண் குழந்தை பிறந்த நேரம் குரங்கு பொம்மை படம் ஹிட்டடிச்சு அடுத்தடுத்து இதே மாதிரி நல்ல படங்கள் நடிக்கணும்கிற எண்ணத்தைக் கொடுத்திருக்கு!’’ என்றவர் பாரதிராஜாவுடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் நித்திலன், நடிகர் கல்கி, படத்தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.