நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று மாலை, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பலமுறை மத்திய அரசை அணுகினார். பிரதமரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அதனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் நிலைமை மாறிவிட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு தலைவணங்கி செயல்பட வேண்டியது அரசின் கடமை ஆகும்.
இந்த விவகாரத்தில் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு இதுவரை பதில் தரவில்லை. இதற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் முயற்சிதான் செய்ய முடியும்.
நாங்கள் முயற்சி செய்யவில்லை என்று சொல்வது தேவையில்லாத ஒன்று.
மத்திய அரசிடம் இணக்கமாக இருக்கவேண்டும் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அதன்படியே செயல்பட்டு கொண்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்பதற்காக மத்திய அரசை குறை சொல்ல விரும்பவில்லை. மத்திய அரசு எங்களை ஏமாற்றவில்லை.
இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முந்தைய தி.மு.க., காங்கிரஸ் அரசுதான் காரணம். முந்தைய அரசு செய்த தவறுகளை சரி செய்ய நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். நீட் தொடர்பாக மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசை வலியுறுத்துவோம். பாராளுமன்றத்திலும் குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.