ஏ.ஆர்.ரஹ்மானின் “தாய் மண்ணே வணக்கம்” இன்று மாலை சென்னையில் நடக்கிறது:
ஜெயா டிவிக்காக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் “தாய் மண்ணே வணக்கம்” என்ற பெயரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது.
ஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக உள்ளூரில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. முழுக்க தமிழில் நடக்கும் இசை நிகழ்ச்சியும் இதுவே. தேர்ந்தெடுத்த 30 தமிழ் பாடல்களை இந்த நிகழ்ச்சியில் பாட இருக்கிறார்கள். இதற்கு முன் தரமணியில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ரஹ்மான். அதன் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் நடத்துகிறார்.
இந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர்கள், 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் இந்த இசை விழாவில் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் ரோஜா முதல் கடல் வரை தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் என்று ரஹ்மானே அறிவித்துள்ளதால் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு எதிர்நோக்கி உள்ளனர்.