தேவகோட்டையில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா!

studant 3
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

                                   விழாவிற்கு  வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை அரசு தோட்டக்கலை பண்ணை  அலுவலர் தர்மர் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி செடிகளை பாதுகாப்பாக வளர்ப்பது எவ்வாறு என்று விளக்கமாக கூறினார்.விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.வீடுகளில் சென்று அவற்றை பாதுகாப்பாக வளர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.கன்றுகள் வளர்ப்பதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஆசிரியர்களே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு ,நன்றாக மரம்  வளர்க்கும் மாணவர்கள் அனைவர்க்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.மரக்கன்றுகளைசுற்றுப்புற சுழலில் அக்கறை கொண்ட அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஏற்படுத்தி உள்ள ம- 3 அமைப்பினர்  வழங்கினார்கள்.மாணவர்களுக்கு பூவரசு,கொன்றை,புங்கை ,வேம்பு போன்ற மருத்துவ குணம் நிறைந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலர் தர்மர் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

விரிவாக : 

பள்ளித்தலைமையாசிரியர் சொக்கலிங்கத்திடம்  பேசினோம்,‘’ அமெரிக்காவில் வசிக்கிற தமிழர்களில் சுற்றுபுறச்சூழலில் அக்கறை கொண்டவர்கள் இணைந்து ’ம – 3’னு ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்காங்க. அதோட நோக்கமே மண், மரம், மழை ஆகியவற்றைக் பாதுகாக்கணும்னு என்பதுதான். அதாவது பாஸ்ட்புட் தவிர்த்து மண்ணில் விளையும் இயற்கை விவசாய உணவுப்பொருளை உண்ண ஊக்குவிப்பது, மரக்கன்றுகளை அதிகளவில் நடுவது, மழைநீரைச் சேமித்து வைப்பது இதுதான். இந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டு அதை மாணவர்களையே பராமரிக்கச் செய்யவேண்டும்னு பள்ளிகளில் மரம் வளர்க்கும் திட்டத்தை தொடங்கியிருக்காங்க. அதன்படி, சிவகங்கை  மாவட்டத்தில் முதலில் எங்க பள்ளியிலதான் அமல்படுத்தணும்னு சொன்னாங்க. இந்த பவுண்டேசனின் உதவியோடு அரசு தோட்டகலை பண்ணையில் இருந்து பூவரசு ,புங்கன்,கொன்றை   மரக்கன்றுகளை வாங்கி பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்து விட்டு வளர்ப்பது என முடிவுசெய்தோம். ஆனால், மாணவர்கள் வீடுகளில் எவ்வாறு செடிகளை கொண்டு சென்று வளர்ப்பார்கள் என்று ஒரு சந்தேகம் வந்தது. அதனால பள்ளி ஆசிரியர்களிடம் பேசி ஒரு முடிவெடுத்தோம்.

               எங்க பள்ளியில படிக்குற அனைத்து  மாணவ, மாணவிகளுக்கு ஆளுக்கு ஒரு மரக்கன்றை கொடுத்து, வீட்டுல வச்சு முறையாத் தண்ணீர் ஊற்றி பராமரிக்கணும்.  மரக்கன்றுகள் வளர்க்குற பொறுப்பை எடுத்திருக்குற மாணவர்களின் வகுப்பாசிரியர், மூன்று நாளுக்கு ஒரு முறை மாணவரோட பெற்றோரின் போன் நம்பருக்கு போன் செய்து பெற்றோரிடம்  பேசி, ’’தண்ணீர் ஊத்தினார்களா , கன்று எப்படி வளர்ந்துருக்குன்னு’’ கேட்பார்கள்.மேலும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாணவர்களின் வீடுகளுக்கு சென்று செடி வளர்ப்பதை ஆசிரியர்கள் பார்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.நன்றாக வளர்க்கும் மாணவர்ளுக்கு

பரிசுன்னு சொல்லியிருக்கோம்.  ஒரு மரக்கன்றை கொடுத்து முறையா தண்ணீர் ஊற்றி வளர்த்துடணும்னு சொல்லுறதுனால மாணவருக்கு ஒரு பொறுப்பு வந்துடும்.செடிகள் கொடுக்கும் இரண்டு மாதம் முன்பாகவே இருந்து மாணவர்களுக்கு செடி வளர்ப்பதன் பயன்கள்,அதனை பாதுகாப்பாக வளர்ப்பதால் எவ்வாறெல்லாம் நாட்டுக்கும்,வீட்டுக்கும் பயன் என்றெல்லாம் விரிவாக  வகுப்பில் ஆசிரியர்களாலும்,காலை வழிபாட்டு கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியராலும் தினம்தோறும் விரிவாக விளக்கப்பட்டது.இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்தே செடி நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறு மாணவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. அந்தந்த மரக்கன்றுகளை அந்தந்த மாணவர் கையாலயே குழி எடுத்து, நட்டு, பாத்தி கட்டி தினமும் தண்ணீர் ஊத்தி வளர்க்க சொல்லப்போறோம். அந்தந்த மரக்கன்றுக்கு அந்தந்த மாணவர் பெயரையே வைக்கப் போறோம்’.
studant

studant 4

studant 2

                இந்த ம -3 அமைப்பு  மூலம் மரம்வளர்ப்பு திட்டத்தை மாவட்டத்துல முதல்ல எங்க பள்ளியில துவங்குறதுக்கு பள்ளியிலேயே 15க்கும் மேற்பட்ட மரங்களை பள்ளியின் வெளியிலும்,உள்ளேயும் மிக சிறப்பாக மாணவர்கள் ஏற்படுத்தி உள்ள பசுமை படை அமைப்பின் வழியாக சிறப்பாக வளர்த்து மரங்களை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பள்ளியின் வெளியில் திறந்த வெளியில் உள்ள பகுதியில் முறையாக செடிகளை நட்டு பராமரித்து பெரிய மரங்களாக உருவாக்க மாணவர்களே முயற்சி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                                            பவுண்டேசனின் அமைப்பாளர்களில் ஒருவரான ப்ரதிவி என்பவர் என்னிடம் பேசும்போது, நான் தற்போது அமெரிக்காவில் பணி செய்து வருகிறேன்.எனக்கு சொந்த ஊர் மதுரை ஆகும்.நான் படிக்கும் காலத்தில் எனக்கு செடி வளர்ப்பது தொடர்பாக தெரியாமலே போய்விட்டது.அதனை போக்கவே இளம் வயதில் உள்ள பள்ளி மாணவர்களிடம் இயற்கை பாதுகாப்பது,செடி வளர்ப்பது,சுற்று சூழலை பாதுகாப்பது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களின் வழியாக எடுத்து சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.வரும்கால தமிழகத்தில் இளம் மாணவர்கள் அதிகமான மரங்களை வளர்த்து சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும் என்று கூறினார்.

செடி வளர்ப்பது எப்படி ? அரசு தோட்டக்கலை அலுவலர் தர்மர்  விளக்கம் :

                       இதன் தொடர்ச்சியாக நாங்கள் எங்கள் பள்ளியில் செடிகளை மாணவர்களுக்கு கொடுத்ததுடன் ,அதனை எவ்வாறு பாதுகாப்பாக வளர்ப்பது என்பது தொடர்பாக தேவகோட்டை அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலர் தர்மரை அழைத்து வந்து மாணவர்களிடமும்,பெற்றோர்களிடமும்  செயல் விளக்கம் கொடுக்க வைத்தோம் .செடி வளர்ப்பது தொடர்பாக தர்மர் கூறியதாவது :

                                 செடி வளர்ப்பதற்கு முதலில் வீட்டில் இருந்து சில அடி தூரத்தில் ஒரு ஆடி  ஸ்கேலில் ஒன்றரை அடி ஆழம்,அகலம் ஒரே அளவாக தோண்டி பெரிய குழியாக வெட்ட வேண்டும்.இரண்டு நாட்கள் அதனை ஆற வைக்க வேண்டும்.செடி உள்ள பேப்பரை கிழித்து மண் சிதறாமல் அதனை அந்த குழிக்குள் வைக்க வேண்டும்.ஆட்டு சாணம் ,மாட்டு சாணம் கொண்டு செடியை நன்றாக தடவ வேண்டும்.மாலை நேரம் நட்டு தண்ணீர் முதலில் பத்து நாட்களுக்கு தொடர்ந்து ஊற்ற வேண்டும்.பிறகு காலை மட்டும் தண்ணீர் விட்டால் போதும்.செடியை நடும்போது ஏன் அதனை சுற்றி உள்ள பையை கிழிக்க வேண்டும் என்றால் அப்போதுதான் வேர் வெளியில் செல்லும்.பை இருந்தால் வேர் வெளியில் வராது .செடியை சுற்றிலும் வேலி அமையுங்கள்.செலவே இல்லாமல் காய்ந்த குச்சி ,பழைய துணி ,கையிறு வைத்து கட்டி தைத்து விடுங்கள்.அதுவே நல்ல பாதுகாப்பு.

                  பூவரசு மரம் இலைகள் சித்த மருத்துவம் குணம் நிறைந்தது. தோல்  பரு நீக்கும்.வீணை பலகை செய்யலாம்.மரம்,கட்டில் கதவு செய்யவும் பயன்படுகிறது. ஓராயிரம் பறவைகள் இதனை பயன்படுத்தி உணவாக சாப்பிடும்.சுற்று சூழல் பாதிக்காது.பூச்சிகள் தாக்காது .செடியை குழிக்குள் வைத்து பாலிதீன் கவர் வைத்து மூடவும்.ஒரு நாளில் நாளில் நிற்கும் தண்ணீர் பாலிதீன் கவர் வைத்தால் ஈரப்பதம் தாங்கி  நான்கு நாட்கள் இருக்கும்.புங்கை மரம் வைத்து நன்கு வளர்ந்து விட்ட பிறகு அதன்  நிழலில் வேறு  செடி வைத்தால்   அது வளராது.ஒரு வருடம் முழுவதும் நீங்கள் வளர்த்தால் அது உங்களை பல வருடங்கள் பாதுகாக்கும்.  இன்று அதிகம் மழை இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.இந்த கால கட்டத்தில் நீங்கள் அனைவரும் செடிகளை நட்டு பல வருடங்கள் பாதுகாத்து அதனை வளர்த்து பின்பு நாட்டுக்கு நல்லது செய்யுங்கள்.வாடகை    வீட்டில் இருப்பது குறித்து தயக்கம் வேண்டாம்.நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நாம் நன்றாக பயன்படுத்த வேண்டும்.வாடகை வீட்டில் இருப்பவர்கள் சில காலம் நன்றாக செடியை வளர்த்து விட்டு அடுத்து வருவர்களுக்கு விட்டு செல்லலாம்.நாம் நல்ல முறையில் அடுத்தவருக்கு உதவியாக இருக்கலாம்.இவ்வாறு பேசினார்.

             நிறைவாக கோட்டையன் ,ஜெனிபர் ,ரஞ்சித்,சக்திவேல்,வெங்கட்ராமன்  உட்பட பல மாணவ,மாணவியர் பல்வேறு கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.பூவரசு போன்ற மரங்களுக்கு அதிகமான உரம் தேவையில்லை என்றும் கூறினார்.பெற்றோர்கள் சார்பில் பாண்டியம்மாள் ,சீதா லெட்சுமி பேசினார்கள்.மாணவர்கள் காயத்ரி,நந்தகுமார்,ராஜேஷ்,ஐயப்பன் ஆகியோர் பேசினார்கள்.

                       மரங்களுடன் ஒரு புதிய தலைமுறை உருவாவது உறுதி செய்யப்பட்டது.

Leave a Response