கன்னியாக்குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வாழைத்தார் வெட்டும் பணி பாதிக்கப்பட்டு, விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. பூதப்பாண்டி அதன் சுற்றுவட்டாரங்களில் வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்தும் மழை காரணமாக அவற்றை வெட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் குமரி மாவட்டம் மொத்த சந்தைக்கு வரும் மட்டிப்பழம், செவ்வாழை, ரஸ்தாளி வாழைத்தார்களின் எண்ணிக்கை குறைந்து அவற்றின் விலை இருமடங்காக உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து குமரி மாவட்டத்தின் பல இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே போல குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.