காட்டெருமை கூட்டத்துக்கு பயந்து நாங்கள் ஓடி ஒளிந்தோம் – ‘உரு’ பட இயக்குனர்…

URU
வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் விக்கி ஆனந்த். இத்திரைப்படத்தை பற்றி அவர் கூறியதாவது, “உரு என்றால் பயம் என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு உரு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக்கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவுஎடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும் போது அவரைச் சுற்றி சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் பரபரப்பான் திகில் கதை, என்றாலும் பேய் இல்லாத திகில் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், மேகமலை ஆகிய இடங்களில் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடத்தினோம். சில சமயங்களில் காட்டெருமை கூட்டத்துக்கு பயந்து நாங்கள் ஓடிஒளிந்த வித்தியாசமான அனுபவம் எங்களுக்கு ஏற்பட்டது. படப்பிடிப்பு நடந்தது டிசம்பர் மாதம் என்பதால் ஜீரோ 4 டிகிரி குளிரில் மழைக்காட்சியில் கலையரசனும், தன்க்ஷிகாவும், ஹீட்டர் உதவி இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு நடித்தனர்.” என இயக்குனர் விக்கி ஆனந்த் தெரிவித்தார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசன்னா எஸ்.குமார் கவனிக்க, ஜோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகளை ஷான் லோகேஷ் செய்துள்ளார். ஜூன் ௧௬ அன்று ‘உரு’ திரைப்பம் உலகெங்கிலும் வெளியாகிறது.

Leave a Response