கோமாவில் தமிழக அரசு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு…

stalin.1
தமிழக அரசு கோமா நிலையில் இருப்பதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் பல முக்கியப் பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவினர் தங்கள் கட்சிக்குள் சண்டையிட்டுக்கொண்டு செயல்படாமல் இருக்கின்றனர் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று குற்றம்சாட்டினார். ஆளுநர் தலையிட்டு அரசை செயல்பட வைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவை சபாநாயகர் அலுவலகத்திற்குச் சென்ற அவர், தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின் நடத்த வேண்டிய மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற வேண்டும் என்றும் அவர் தன் மனுவில் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். மேலும், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறார்.

சபாநாயகரிடம் மனுவை கொடுத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தில் போராடி சலித்துப்போய் டெல்லியில் விவசாயிகள் அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு இவற்றைப் பற்றி கண்டுகொள்ளாமல் கோமா நிலையில்தான் இருக்கிறது.” என்று குற்றம்சாட்டினார்.

Leave a Response