சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து!..

head election-comission
பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் சூழல் வரும்போது மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. வாக்குக்கு பணம், பரிசுப்பொருட்களை கட்சிகள் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வரும்போது தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலையொட்டி, அங்கு நடைபெற்று வந்த பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. ஆனால் அதற்கு முன்னரே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிளவு கண்ட அதிமுக-வின் இரு அணிகள், எதிர்க்கட்சியான திமுக, ஜெயலலிதாவின் சகோதரர் மகள், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என சுமார் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல், பல முனைப் போட்டிகள் நிலவி வரும் தேர்தல் என்பதால், பணப்பட்டுவாடாக்களும் குறைவின்றி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகள் முறையிட்டு புகார் மனுக்கள் அளித்துள்ளன. மேலும், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது வெளியாகியுள்ள அந்த ஆவணங்களில் பணப்பட்டுவாடா குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அதில் அடங்கும்.

ஆர்கே நகர் இடை தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து வருமானவரித்துறை சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது இடைத்தேர்தல் குறித்து கூடுதல் ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, துணை தேர்தல் ஆணையர்கள், தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா உட்பட மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற நீண்ட ஆலோசனைக்கு பிறகு தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Response