விமானத்தில் செல்ல தடை விதித்ததால் ரயிலில் சென்ற எம்.பி சிவசேனா!

ravindra-gaikwad_759
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர், புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். இவர், விமானத்தில் உயர் மதிப்பு கொண்ட பிசினஸ் கிளாஸ் வகுப்பில் டிக்கெட் பதிவு செய்து இருந்தார். ஆனால், அவருக்கு குறைந்த மதிப்பு கொண்ட எக்கனாமிக் கிளாஸ் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதனால் கோபம் அடைந்த ரவீந்திர கெய்க்வாட் டெல்லி சென்றதும் விமானத்தில் இருந்து இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் சிவக்குமார் நேரில் சென்று சமாதானப்படுத்த முயன்றார்.ஆனால், கடும் கோபத்தில் இருந்த ரவீந்திர கெய்க்வாட் மேலாளர் சிவக்குமாரை செருப்பால் பல முறை அடித்தார். இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏர் இந்தியா முடிவு செய்தது. தொடர்ந்து கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும், கெய்க்வாட் விமானத்தில் செல்ல தடைவிதிப்பதாக இந்திய விமான நிறுவன கூட்டமைப்பு கூட்டாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் வார விடுமுறைக்காக மும்பை எப்படி செல்வது? என தத்தளித்து வந்தார். இதனால், வேறு வழியின்றி ரெயிலில் பயணம் செய்ய முடிவெடுத்த கெய்க்வாட், டெல்லியில் இருந்து மும்பை செல்லும் நிஜாமுதீன் ரெயிலில் பயணம்
மேற்கொண்டுள்ளார்.

Leave a Response