சென்னையில் நடந்த விபத்தில் கார் தீப்பிடித்ததில், கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினர். சென்னை, போரூர், ஆலப்பாக்கம் அஷ்லட்சுமி நகரை சேர்ந்தவர் அஸ்வின்சுந்தர் , தேசிய கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றவர். இவரது மனைவி நிவேதிதா; தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இருவரும் நேற்று நள்ளிரவு பி.எம்.டபிள்யூ இசட் ரக சொகுசு காரில் பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி நகரில் இருந்து போரூர் ஆலப்பாக்கம் சென்று கொண்டிருந்தனர்.
எம்.ஆர்.சி., நகர் அருகே நின்றிருந்த கார் மீது, அஸ்வின் கார் மோதி, பின்னர் ஒரு மரத்தில் மோதி, மரத்திற்கும் பிளாட்பாரம் அருகே இருந்த சுவருக்கும் இடையே சிக்கி தீப்பற்றி எரிந்தது.காரின் கதவுகளை திறக்க முடியாமல் இரண்டு பேரும் உள்ளேயே சிக்கி கொண்டனர்.அந்த வழியாக சென்றவர்கள், கார் தீப்பற்றி எரிந்ததை பார்த்து போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தனர். மயிலாப்பூரில் இருந்து போலீசார் விரைந்து வந்து, தீயை அணைத்து இரண்டு பேரையும் மீட்டனர். காரின் பதிவு எண்ணை வைத்து தான், இறந்து போனது அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் , இருவரது உடல்களையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இருவரும் லீ மெரிடியன் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காரில் வீடு திரும்பும் போது சம்பவம் நடந்துள்ளது.