மாவட்ட அளவில் மார்ச் 3-ஆம் தேதி விவசாயத்தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்று ஆதரிக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
கர்நாடகம், தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணிரை வழங்க மறுத்துவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் நீர்தேக்கங்கள் அனைத்தும் தரைமட்ட நிலைக்கு தாழ்ந்து, தமிழ்நாடு முழுவதும் வறட்சியால் பாதிக்கபடுகிறது. குடிநீர் பஞ்சம் உருவாகி உள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தின் நிர்பந்தம் காரணமாக தமிழ்நாடு அரசு வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தது.
200-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் கருகி அழிந்ததால் தற்கொலை செய்தும், அதிர்ச்சியுற்றும் மரணமடைந்துள்ளனர்.இந்நிலையில் விவசாயிகளுக்கு சரியான வறட்சி நிவாரண உதவிகள் பெறுவதற்காக மார்ச்-3 அன்று நடைபெறும் தொழிலாளர் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்று ஆதரிக்கும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.