நடிகர் ரகுமான் நடிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் துருவங்கள் பதினாறு. பல வருடங்களுக்குப் பின் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் ரகுமான். இப்படத்தில் அஸ்வின், பிரகாஷ், டெல்லி கணேஷ், யாஷிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜேம்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஹாலிவுட் பாணியில் திகில் படமாக உருவாகி இருக்கிறது.
இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் A.T. மலர் வெளியிடுகிறார்.
பட வெளியீடு பற்றி வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் விநியோகஸ்தர் A.T.மலர் பேசும்போது, “நாங்கள் திரையுலகில் அடியெடுத்து வைக்க விரும்பினோம். தரமான எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும்படியான படங்களையே வாங்கி வெளியிட நினைத்தோம்.
‘சிங்கம் 3’ படத்தை முதலில் சென்னை மாநகரத்தில் வெளியிட வாங்கினோம். முதல் படமே சூர்யா நடித்த ஹரி இயக்கிய பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள படமாக அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்து “துருவங்கள் பதினாறு ‘ படத்தைப் பார்த்தோம். புதிய இயக்குநர், புதிய படக் குழு என்பதால் ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏதுமின்றி தான் படத்தைப் பார்த்தோம் . ஆனால் படத்தைப் பார்த்த பிறகு எங்கள் அபிப்ராயம் முற்றிலும் மாறி விட்டது. அந்த அளவுக்கு புத்திசாலித்தனமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் என அசத்தியிருந்தார் இயக்குநர் கார்த்திக் நரேன். இப்படம் எல்லாரையும் கவரும் என்கிற நம்பிக்கை வந்து விட்டது . வாங்கி வெளியிடுவதாக முடிவு செய்தோம். படத்தை வாங்கினோம். டிசம்பர் 29-ல் உலகெங்கும் வெளியிடுகிறோம்.
ட்ரீம் பேக்டரி எங்களுடன் இணைந்துள்ளது எங்களுக்கு மேலும் ஊக்கமாகவும் பலமாகவும் அமைந்திருக்கிறது.” என்று கூறினார்.