சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினை மிகவும் பாராட்டினார்கள்.
படத்தைப் பார்த்த சினிமா ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்து வரும் விமர்சனம், பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் பிரஜின்.
பிரஜின் பிரபல தொலைக் காட்சிகளில் நடிகராக வலம் வந்தவர். அலுவலக வேலைபோல போய் கைநிறைய சம்பளம் பெற்று வாழ்ந்தவர். ஆனாலும் அங்கேயே தங்கி விடவில்லை. தன் இலக்கு சின்னத்திரை அல்ல பெரியதிரை என்று உணர்ந்து கொண்டார். திரைவாய்ப்புகள் தேடத் தொடங்கினார். இன்று ஒருபடத்தின் முழு நாயகனாக நடித்திருக்கிறார்.
இதைப்பற்றி அவர் கூறுகையில்,
“என் முதல் படம் ‘சாபு த்ரீ’ அந்தப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. அடுத்து ‘தீ குளிக்கும் பச்சைமரம்’ அது மது அம்பாட் இயக்கிய படம். 2012ல் வெளியானது மார்ச்சுவரி, பிணம் என்று வித்தியாசமாக நகரும் கதை. அந்தப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது. ஆனந்தவிகடன் 43 மார்க் கொடுத்தது.படத்துக்குப் பெரிய விளம்பரம் இல்லை என்றாலும் விருதுகள் நிறைய வந்தன. அது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சீனுராமசாமி, சமுத்திரக்கனி, அறிவழகன் போன்ற இயக்குநர்கள் என்னைப் பாராட்டிய படம்.
நான் நடித்த படங்களுக்கு சரியான விளம்பரம் இல்லாததால் பெரிதாகப் போகவில்லை. இதைச் சம்பந்தப்பட்டவர்களிடம். சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை ஈகோ தடுக்கும் என்ன செய்வது?.” என்கிறார்.
‘பழைய வண்ணாரப்பேட்டை’. படத்தைப் பற்றி கூறுகையில்,
இதற்கெல்லாம் முன்னாடி 2010ல் ஒப்பந்தமான படம்தான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. . படம் பல்வேறு தடைகளால் தாமதமாகிக் கொண்டே வந்தது. இப்போது வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஓரே ஆண்டில் முடியும் என்று நினைத்தோம். காலம் நீண்டுவிட்டது.”
“அதற்காக 5 ஆண்டுகள் விட்டு, விட்டு படப்பிடிப்பு நடந்தது.ஆனாலும் 48 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப் பட்ட படம். அது 24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் ஒரே தோற்றம், ஒரே உடைதான் வர வேண்டும் . அதனால் என் எடை 73 கிலோவை 16 ஆண்டுகளாகப் பராமரித்தேன் தாடியுடன் இருந்ததால் வேறு படங்களிலும் நடிக்க முடியாது.இப்படி பல சிரமங்களை எதிர் கொண்டு முடித்த படம். ‘பழைய வண்ணாரப்பேட்டை’
படத்தைப் பார்த்தவர்கள் படம் நன்றாக இருந்தாலும் வாங்கத் தயங்கினார்கள். அதனால் தயாரிப்பாளர் எம். பிரகாஷ் சிரமப்பட்டார். எங்களை நம்பி அனாமிகா பிக்கசர்ஸ் வாங்கினார்கள். அது இளவரசன், விஜய் ஆதிராஜ் ஆகியோரின் விநியோக நிறுவனம்.நம்பி வெளியிட்டார்கள். சென்னை நகரில் சத்யம் சினிமாஸ் வெளியிட்டார்கள்.
அது எங்களுக்கு நம்பிக்கையாகவும் பெருமையாகவும் இருந்தது.” என்கிறார்.
‘பழைய வண்ணாரப்பேட்டை’ பட ஆடியோ விழாவில் விழாவுக்கு அழைத்த யாரும் வரவில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். நாங்கள் விழாவுக்கு எல்லாரையும் முறைப்படி சம்மதம் பெற்று விட்டுத்தான் அழைப்பிதழில் பெயர் போட்டோம். அப்படியே முறைப்படி அழைத்தோம்.ஆனால் யாரும் வராதது பெரிய வருத்தம். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளப்பலநாள் ஆனது. ஏன் அப்படிப் புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை. இதே விழா பெரிய நடிகர் சம்பந்தப் பட்டது என்றால் வராமல் இருப்பார்களா? 5 ஆண்டுகள் போராடி ஒரு படம் எடுத்தோம். அப்படிப்பட்ட படத்தின் விழாவுக்கு வராமல் ஏன் அப்படிப் புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை ? ”என்று ஆதங்கத்துடன் கூறியவர்,
”எல்லாவற்றுக்கும் ஒன்றுதான் பதிலாக இருக்கும். நாம் வளர வேண்டும். நம் வெற்றி ஒன்றுதான் பதிலாக இருக்கும். அதை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறேன். உழைத்துக்கொண்டிருக்கிறேன் . ” என்கிறார்.
எப்போதாவது சின்னத்திரையிலேயே இருந்து பாதுகாப்பாக பயணம் செய்திருக்கலாமோ என்று நினைத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு,
” 2003-ல் டிவிக்குப் போன நான் நான்கு ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்தேன். 2007-ல் வெளியே வந்து விட்டேன். நான் டிவி யிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன. இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும்.
இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள் தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன் அதனால் மனதை திசைதிரும்ப விடவில்லை சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு.
டிவி மூலம் எல்லாருக்கும் தெரிந்திருப்பதாலேயே வாய்ப்பு தரத்தயங்குவார்கள். என்னை எல்லாருக்கும் தெரியும் .ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள். இது ஒரு மாதிரியான சிக்கல் .சிலர் இவருக்கு என்ன வியாபாரமதிப்பு இருக்கிறது? என்பார்கள். இதற்கிடையே நான் 2007 ல் திருமணம் செய்து கொண்டே:ன் என் மனைவி ஒரு சின்னத்திரை நடிகை. அவர் என்னையும் என் இலக்கையும் புரிந்து கொண்டிருப்பதால் ஆதரவு தந்து பக்கபலமாக இருந்தார். இது சாதாரண விஷயமல்ல.” என்கிறார்.
இப்போது நடித்து வரும் படங்கள் பற்றி பிரஜின் ;
நான் நடித்த ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. இப்படத்தை தயானந்தன் இயக்கியிருக்கிறார். இவர் சீனு ராமசாமியின் உதவி இயக்குநர். இன்னொரு படம் ‘மிரண்டவன்’ . அதை இயக்கியிருப்பவர் முரளி கிருஷ்ணா. இப்படமும் வெளிவரத்தயாராக இருக்கிறது.
தாமிரா இயக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் 2 வது நாயகனாக நடிக்கிறேன். சமுத்திரக்கனி சார்தான் நாயகன். அவர்தான் என்னை டிவியில் அறிமுகப் படுத்தியவர்.அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி.பேசும் போதே நம்பிக்கை தருபவர் அவர்.
அடுத்து இன்னொரு புதிய படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது, நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். ”என்று வருங்கால வாய்ப்புகள் பற்றிப் பட்டியலிடுகிறார் பிரஜின்.