அரண்மனை –விமர்சனம்

தனது மாமாவின் கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சொந்த ஊரில் இருக்கும் அரண்மனையை விற்க, மனைவி ஆன்ட்ரியாவுடன் வருகிறார் வினய். இன்னொரு பக்கம் அதன் வாரிசுதாரர்களாக மனோபாலா, கோவை சரளா, நிதின் சத்யா என ஒரு குரூப் உள்ளே வருகிறது..

தானும் ஒரு வாரிசுதான் என சொல்லிக்கொண்டு சந்தானம், சுவாமிநாதன் என ஒரு குரூப்பும் உள்ளே வருகின்றனர். ஒரு வேலை விஷயமாக ஆண்ட்ரியாவின் வக்கீல் அண்ணனான சுந்தர்.சி.யும் வருகிறார். பத்திரம் முடிக்கும் வரை சில நாட்கள் அரண்மனையில் தங்கி இருக்க முடிவு செய்கிறார்கள்..

ஆனால் ஒவ்வொருவருக்கும் அங்கே இருக்கும் பேய் ஒன்று தட்டுப்படுகிறது, அதை தொடர்ந்து நடக்கும் மூன்று மரணங்கள் என அந்த வீட்டில் தினசரி பகீர் விஷயங்கள் நடக்கின்றன. இதை கண்டுபிடிக்க சுந்தர்.சி களத்தில் இறங்குகிறார்.. பேயின் டார்கெட் என்ன என்பதை கண்டுபிடித்து அதை அப்புறப்படுத்த முயல்கிறார்.. முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்து கதை பின்னுவதில், தான் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சுந்தர்.சி. வினய், சுந்தர்.சி என இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் லட்சுமிராய், ஆண்ட்ரியா, ஹன்சிகா என ஹீரோயின்களின் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. பிளாஸ்பேக்கில் மட்டும் கொஞ்சநேரமே வரும் ஹன்சிகா பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார். லட்சுமிராய கவர்ச்சி ஏரியாவை கையாள்கிறார். ஆண்ட்ரியாவின் மிரட்டல் நடிப்பும் பக்கபலம்..

படத்திற்கு சந்தானம்-சுவாமிநாதன் அன் கோவின் காமெடி நான் ஸ்டாப் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது. மனோபாலா-கோவைசரளாவின் பிளாஸ்பேக் காதல் மீண்டும் ரிட்டர்ன் ஆவது செம கலாட்டா. மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தை பேயுடன் பேசும் காட்சிகள் மிரட்சி தருகின்றன. பரத்வாஜின் இசை பாடல்களை விட பின்னணியில் மிரட்டி திகிலூட்டுகிறது..

சந்திரமுகி, அருந்ததி, முக்கியமாக எண்பதுகளில் ரஜினி நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என பல படங்களில் பார்த்த காட்சிகள் இதில் இடம்பெற்றிருப்பதை பார்க்கும்போது காமெடி கிங்கான சுந்தர்.சிக்கு த்ரில்லர் ஏரியா அவ்வளவாக செட்டாகவில்லை என்பது தெரிகிறது.

வினய்யுடன் சேர ஐந்து வருடங்கள் காத்திருந்த ஹன்சிகா, எதிரிகளை கொல்ல அவ்வளவு காலம் காத்திருந்தது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது. ஆனால் தனது வழக்கமான பாணியில் படம் முடியும்வரை போரடிக்காத பொழுதுபோக்கிற்கு இந்தமுறையும் உத்தரவாதம் தந்திருக்கிறார் சுந்தர்.சி. இந்த அரண்மனையை தாராளமாக ஒருமுறை குழந்தைகளுடன் சுற்றிவிட்டு வாருங்கள்.