இனி வருடத்திற்கு ஒரு படம் தான் – ரஜினி வழியில் சூர்யா..!

சூர்யா நடித்த ‘சிங்கம்-2’ வெளியாகி ஒரு வருடம் முடிந்து கூடவே ஐந்து நாட்களும் ஆகிவிட்டன. ஆனால் இப்போதுதான் அவரது அடுத்த படமான ‘அஞ்சான்’ ஆடியோ ரிலீசையே நெருங்கியிருக்கிறது. வரும் ஆகஸ்ட்டில் இந்தப்படம் வெளியாகும் என தெரிகிறது.

எட்டு மாத இடைவெளியில் விஜய் தனது படங்களை ரிலீஸ் பண்ணுகின்ற அதே நேரத்தில் சூர்யா மட்டும் ஏன் இப்படி ஒரு வருட இடைவெளி எடுத்துக்கொள்கிறார் என்றால் இனிமேல் அப்படித்தானாம். ஒரு நேரத்தில் ஒரே படத்தின் மீதுதான் கவனம் செலுத்தப்போகிறாராம்.

அஞ்சானை தொடர்ந்து அடுத்து வெங்கட்பிரபுவின் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார் சூர்யா. அதை முடித்துவிட்டுத்தான், தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘மனம்’ படத்தை இயக்கிய விக்ரம் கே.குமாரின் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார்.

1994க்கு பிறகு ரஜினி இப்படித்தான் வருடத்திற்கு ஒரு படம், பின்னர் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என தனது பாதையை மாற்றிக்கொண்டார். அந்த வழியில் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கும்போதுதான் கவனத்தை இன்னொரு படத்தில் சிதறவிடாமல் வெற்றியை குறிவைத்து பெறமுடியும் என்று நினைக்கிறாராம் சூர்யா.